புதன், 25 நவம்பர், 2015

பண்டிதர் ஏற்றிவைத்த கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம்.

தி.ஸ்டாலின்



கார்த்திகை தீபம் என்னும் திருநாளை இன்றைக்கு இந்துக்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள். நாத்தீகம் பேசும் இந்துக்களும் ஆம் அது இந்துக்கள் பண்டிகைதான் என்று கூறி இந்துக்களுக்கு சார்பாக நிற்கிறார்கள். பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கு இடையில் நடந்த 'ஈகோ' சண்டையை சிவன் தீர்த்து வைத்ததைப் போற்றும் வகையில் சிவனைப் போற்ற தீபநாள் கொண்டாடப்படுவதாகவும், முருகனி அவதார நாளே தீபத் திருநாள் என்றும் பலக் கதைகள் தீபத்திருநாளுக்கு கூறப்படுகின்றன. நாத்தீகர்களும் இக்கதைகளையே நம்பிக்கொண்டு தீபத்திற்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஆனால் கார்த்திகை திரு நாள் குறித்த மாறுபட்ட பார்வையும் இங்கே இருக்கிறது. அது பௌத்த பார்வை. அதில் மூடநம்பிக்கை இல்லை. பகுத்தறிவான பார்வை. பண்டிதரின் பகுத்தறிவு பார்வை நம்முன் ஏற்றிவைக்கும் தீப வரலாறு இதுதான்.

நெடுங்காலத்திற்கும் முன் மலாடபுரம் என்னும் ஊரில் இருந்த பௌத்த சங்க அறிஞர்கள் ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) தாவரங்களான பேராமணக்கு, சிற்றாமணக்கு விதைகளைக் கொண்டு அதிலிருந்து எண்ணெய் எடுத்து அதை மருந்துகளுடன் இணைத்து ஆராய்ந்தும், அதன் மூலம் ஏற்றப்படும் தீபம் வெப்பம் இன்றி குளிர்ச்சியான சூழலைக் கொடுப்பதை அறிந்தும் அவற்றை மக்களுக்கும் பயன்படும் நோக்கத்தில் அரசனிடம் சமர்ப்பித்தனர். பௌத்த ஆராய்ச்சியாளர்களின் படி ஆமணக்கு விதைகளைச்  சேகரித்து எண்ணெய் எடுத்து தனது அரசாட்சிக்குட்பட்ட பெரும் மலை ஒன்றில் பெரிதாக பள்ளம் வெட்டி அதில் ஆமணக்கு எண்ணெய் ஊற்றி, பருத்தியினால் பெருந்திரிகளை தயாரித்து அதிலிட்டு தீபமேற்றிட ஆனையிட்ட அரசன், விடியும் வரை தீபம் எரிவதைக் கண்டு பிறகு காலையில் அம்மலையில் இருக்கும் பறவைகளுக்கும் உயிர்களுக்கும் ஏதேனும் அதனால் தீங்கு ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்தார். எவ்வுயிர்களுக்கும் அதனால் எத்தீங்கும் ஏற்படவில்லை என்பதை அறிந்த அரசன் மக்களின் பயன்பாட்டுக்கு ஆமணக்கு எண்ணெயை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் இதுவரை பயன்படுத்திராத அவ்வெண்ணெயை பயன்படுத்த மக்களுக்கு சிறிது அச்சமாக இருந்தது. அதனால் மூன்று நாட்களுக்கு ஆமணக்கு எண்ணெய் இட்ட தீபத்தை வீட்டு வாசல்களிலும், மாடங்களிலும் ஏற்றி சோதித்தனர். அப்போதும் எந்தக் கெடுதலும் வராததைக் கண்டு மகிழ்வுற்ற மக்கள் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தத் துவங்கினர். அச்சம்பவங்களை நினைவுக் கூறவே கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம் கொண்டாடப்பட்டது. அதாவது, பௌத்த அறிஞர்கள் கருமேகம் சூழும் மாதத்தை கார்திகை என்று பெயரிட்டனர். காரிருளை அகற்றும்-துலக்கும்- தீபத்தை கார்த்துல தீபம் என்று குறிப்பிட்டனர். கார்த்துல தீபத்தை கார்த்திகையில் ஏற்றி மக்கள் கொண்டாடினார்கள். முதன் முதலில் பெருந்தீபம் ஏற்றப்பட்ட மலையை மக்கள் அண்ணாந்து பார்க்கும் மலை என்றனர். பிறகு அதுவே அண்ணாமலை என்றும் திருவண்ணாமலை என்றும் ஆனது. அம்மலையில் அமைக்கப்பட்ட பௌத்த விஹாரைக் கைப்பற்றிய பார்ப்பனிய மதம் கார்த்திகை மாத பௌர்ணமியில் கொண்டாடப்பட்ட கார்த்துல தீபத்தையும் கைப்பற்றி கட்டுக்கதைகளைத் திரித்துக்கொண்டது.
சீனாவிலிருந்து வந்த யாத்ரீகன் யுவாங் சுவாங் சீனாவுக்கும் இப்பண்டிகையை பரபப்பச்செய்தார். நாம் கார்த்திகைக் கொண்டாடும் இதே காலத்தில் சீனாவில் தீபங்கள் ஏற்றுவதும் பட்டாசு வெடிப்பதும் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஆமணக்கு உற்பத்தியில் இந்திவுக்கு முதலிடம், சீனாவுக்கு இரண்டாமிடம் என்பதையும் இங்கே கவனம் கொள்ளவேண்டும்.

பண்டிதர் இவற்றுக்கு தரும் இலக்கிய ஆதரங்கள்:
1. பதார்த்த சிந்தாமணி
உண்டாலுதிரப்பலநோயும் ஒடுங்கிருமிகுடல்வாதம்
கண்டே சுவைக்கில் விளக்கெண்ணெய் கண்ணேகுளிருங் குணந்தேறுங்
கொண்டால் கிரந்தி சூலையுடன் கொடிய கரப்பான் பலமேகம்
விண்டோர்தோஷ கணமாந்த மகலுஞ் சித்தாமணக்கெண்ணெய்.


2. பெருந்திரட்டு - பாசமாட்சி
காராமணத்தைக் கருதிக் கரைந்தங்கு / பேராமணக்கைப் பெற்றார்கள் & ஊரா
ருளப்பருத்தி நெய்யூ மீர்ந்தார் பெருவங் / களம்பார்த்த தீபக்கழல்
புரிமலாடதுபதிந்த பொற்றவசங்கத்தோர்கள்
கரதவாமணக்கு நெய்யை தூயமன்னவன்பாற் கொண்டு
பரத வெல்லை அண்ணாந்து பதிசிரம்பதித்து தீப
மொருதீங்க மேறாதலே யூரவரகத்தி லேற்றார்.


(இங்கே நான் எண்ணெய் என்ற சொல்லையே பயன்படுத்தியிருந்தாலும் துவக்கத்தில் எள்ளில் இருந்து எடுக்கப்பட்டதே எண்ணெய் எனப்பட்டது. அதாவது, எள்+நெய்=எண்ணெய். எனவே ஆமணக்கு நெய் என்பதே சரியென்றாலும் தற்போதைய வழக்கில் எண்ணெய் என்பதே பரவலான அனைத்து நெய் வகைக்கும் சொல்லாகிவிட்டதால் அதையே பயன்படுத்தியிருக்கிறேன்.)

கருத்துகள் இல்லை: