தமிழ்நாட்டின்
மேற்குப்பகுதியில் நடந்துவரும் ஜாதிவெறிக்கொடுமைகள் குறித்து கருத்துக்கூறியுள்ள கம்யூனிஸ்ட்
தலைவர் தோழர் சுப்புராயன் அவர்கள் "கொங்கு மண்டலத்தை தென் மண்டலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது. கொங்கு
மண்டலத்தில், அண்மைகாலமாக உருவாகிவரும் சாதிய அடக்குமுறைகளுக்கு சில சாதிய சக்திகள்
தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே காரணம்" என்கிறார்.
அதாவது தென்மாவட்டம் போல் சாதிவெறி மேற்குப்பகுதியான கொங்கு மண்டலத்தில் இல்லையென்றக்
கருத்தை வலியுறுத்துகிறார். தோழர் சுப்புராயன் பிறந்து வளர்ந்து வாழும் பகுதி என்பதால்
கொங்குப்பகுதிக்கு நற்சான்றை தோழர் வழங்குகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்படிக்கூறுவது
அங்கே ஆதிக்கம் செய்யும் ஜாதியினருக்கு நற்சான்று கொடுப்பதாகவே அமையும். சில சாதிய
சக்திகளென்று அவர்கூறுவது இன்று அங்கேயுள்ள ஜாதிய அமைப்புகளைத்தான். இன்று அங்கே நடக்கும்
தலித் கொலைகளுக்கு அவர்கள்தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவ்வமைப்புகள்
இல்லாதக்காலத்தில் கொங்குப்பகுதியில் ஜாதிவெறி இருந்ததா இல்லையா? கம்யூனிஸ்டுகள் பணியாற்றியப்பகுதியாதலால்
அப்படியிருந்திருக்காது என்பார்கள் கம்யூனிஸ்டுகள். தோழர் சுப்புராயனும் கூட தலித்
தொழிலாளரும் பிராமணத்தொழிலாளரும் ஒன்றாகவே உக்கார்ந்து சாப்பிட்டார்கள் என்கிறார்.
சாப்பிடும் கேண்டீன் வாழும் இடமல்ல. வாழ்நிலையில் ஜாதி உள்ளதா இல்லையா? கொங்கு நிலங்களெல்லாம்
யாரிடம் உள்ளது? அதற்கு ஜாதிக்காரணமில்லையா? தீரன் சின்னமலை பேரவ என்னும் ஜாதிவெறிக்
கும்பல் வந்துதான் கவுண்டர்களுக்கு நிலங்களைக்குவித்துக்கொடுத்ததா? அங்கே ஏற்கனவே நிலவிய
சாதிவெறிதான் யுவராஜ் போன்றவர்களை உருவாக்குகிறது. யுவராஜ் போன்றவர்களால் ஜாதியின்
துணையும் பின்னணியும் இல்லையென்றால் தலைவர்களாக வலம்வரமுடியாது.
மேலும் தோழர் இன்னுமொரு விஷயத்தையும் சொல்கிறார். "உழைக்கும்
வர்க்கத்தினரிடம் எந்த பாகுபாடும் இல்லை.
ஆனால்,
உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்க்காது
என்பதால் அவர்களே உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் வகுப்புவாதத்தை
தூண்டுகின்றனர்" என்கிறார். உழைக்கும் வர்க்கத்திடம் எந்தபாகுபாடும்
இல்லையென்பது அப்பட்டமாக ஜாதியத்துக்குத் துணைப்போவதேயாகும். இதை இடது சாரிகள்
தொடர்ந்து செய்துவருகிறார்கள். இங்கே
உழைக்கும் ஜாதிகள் உண்டு. உழைக்கும் வர்க்கமென்று எதுவுமில்லை. வர்க்கமாக
உண்ராதவர்களை வர்க்கமென்று நம்பும் குழப்பவாதிகளாகவே தோழர்கள் இருக்கிறார்கள்
என்பதைத்தான் தோழர் சுப்புராயனின் கருத்துக் காட்டுகிறது. பன்னாட்டுக் கம்பெணிகளின் ஆதிக்கம் உள்ள
நாடுதான் இது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள்தான் வகுப்புவாதத்தை(ஜாதிவாதத்தை-தோழர்களுக்கு
Class க்கும் Casteக்கும் வித்தியாசம் தெரியுமல்லவா) தூண்டுகிறார்கள் என்பதெல்லாம்
உள்ளூர் ஜாதிவெறியைப் பாதுகாக்கும் கருத்துரைத்தவிர வேறில்லை. இதையெல்லாம்
யுவராஜுகள் செய்யலாம் தோழர்கள் செய்யலாமா?
--ஸ்டாலின்
தி