ஞாயிறு, 7 ஜூலை, 2013

தலித் சொந்தங்களே !


நாம் தற்போது மிகுதியான வேதனையிலும் துக்கத்திலும் தள்ளப்பட்டிருக்கிறோம். வேதனையும் துக்கமும் நமக்கு புதிதல்ல. நம்முடைய வரலாறும் வாழ்வும் வேதனைகளை, துக்க துயரங்களை எதிர் கொள்வது தான். சில சம்பவங்கள் நம்மை மிக மோசமான துயரத்தில் தள்ளிவிடுகின்றன. தம்பி இளவரசனின் மரணம் அப்படிப்பட்ட சம்பவம் தான். சாதிவெறி இளவரசனை படுகொலை செய்திருக்கிறது. நாம் இளவரசனை சாதிவெறிக்கு பறிகொடுத்திருக்கிறோம்.

        சாதிவெறி இளவரசனை படுகொலை செய்திருக்கிறதென்றால், அரசு இப்படுகொலைக்கு துணை போயிருக்கிறது. தருமபுரி தாக்குதலின் போழ்தே அரசு விரைவான, சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்திருந்தால் இளவரசனின் மரணம்-படுகொலை- நிகழந்திருக்காது. அரசு பேருந்தை எரித்தால் கடும் கோபம் கொள்ளும் அரசு சேரிகள் எரிக்கப்படுவதை வேடிக்கைப்பார்க்கிறது. இதில் பார்ப்பன ஜெயலலிதா சூத்திர கருணாநிதி எனும் பேதமெல்லாம் இல்லை. எல்லோருமே சேரிகள் எரிக்கப்படுவதை, தலித்துகள் கொல்லப்படுவதை வேடிக்கைப்பார்க்க மட்டுமே செய்கிறார்கள். இது போன்ற ஆட்சியாளர்களின் அலட்சியங்கள் தான் இளவரசன் போன்ற நம் இளம் குருத்துக்களை பலி கொள்கின்றன. ஒரு வகையில் சாதிவெறியும் அரசின் அலட்சியமும் இணைந்தே தான் இளவரசனை கொன்றிருக்கின்றன. இதை அரசு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பேருந்துகள் மட்டுமல்ல அரசின் சொத்து, மக்களும் தான் என்பதை உணராத அரசு மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. இளவரசனின் கொலைச் சம்பவத்திற்காக நாம் அரசையும் கடுமையாக கண்டித்தாக வேண்டும்.

இளவரசனின் மரணம் கொலையா தற்கொலையா என்பதைப் பற்றிய விசாரணைகள், ஆய்வுகள், விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு வெளிப்படையான உண்மை இளவரசனின் மரணத்திற்கு முதன்மையான, நேரடியான காரணம் சாதியம். என்பது தான் சாதியம் மனிதர்களை பலிவாங்கும் ஒரு கொடூரமான கோட்பாடு என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. இன்று இளவரசனின் இளவரசன் எனும் இளைஞனின் மீது எந்தவித நியாயமோ, உரிமையோ இன்றி சாதியம் செலுத்திய வல்லாதிக்கம் தான் இளவரசனை கொன்றிருக்கிறது. படுகொலை செய்தவர்களுக்கு கூட இங்கே தூக்கு தண்டனை/மரண தண்டனை கூடாது என்கிறார்கள். ஆனால் காதல் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக இளவரசனுக்கு சாதியம் மரண தண்டனைக் கொடுத்திருக்கிறது. சாதியம் எனும் இந்த கொடூரமான, பைத்தியக்காரத்தனமான, மிருகத்திற்கு இரையாகத் தான் நம் முன்னோர்களை, முருகேசன்களை, பொன்னருவிகளை பறிகொடுத்திருக்கிறோம். இன்று இளவரசனையும் பறிக்கொடுத்திருக்கிறோம். சாதிய மிருகத்திடமிருந்து இன்னும் எஞ்சியிருக்கும் நம் இளவரசன்களையும் இளவரசிகளையும் எப்படி பாதுகாக்கப்போகிறோம் என்கிற கேள்வியை எழுப்பிவிட்டு போயிருக்கிறான் இளவரசன்.

        சாதியம் போன்ற முட்டாள் தனங்களிலிருந்து விலகி வாழ்ந்த அறிவுப்பூர்வமான சமூகம் தலித் சமூகம். பெளத்தமே நம்முடைய மதமாக, வாழ்க்கை நெறியாக இருந்தது. பார்பனியத்தின் சூழ்ச்சியானஎழுச்சியால் நாம் ஒடுக்கப்பட்டோம். சிதறுண்டோம். பார்பனியம் தனது வக்கிர புத்தியான சாதியத்தால் நம்மை ஒடுக்கியது. சாதிய முறைக்கு அப்பாற்பட்ட நம்மை, சாதியவாதிகள் தங்களுக்கு கீழான சாதியினராக ஆக்க முயன்றனர். அதை ஏற்றுக்கொள்ளாத நாம் ஆயிரமாண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய வரலாறு திராவிட வரலாறோ தமிழனின் வரலாறோ அல்ல. அப்படி நம்ப வைக்கப்படுகிறது. நாம் தமிழ்தேச தலைவர்களாலும், திராவிடத்தலைவர்களாலும் வழிநடத்தப்படுகிறோம் என்பதை உணரவேண்டிய தருணம் இது தமிழ்தேசியமும் திராவிடமும் ஊர்த் தெருவிற்கான அரசியல் நிலைப்பாடுகள். நாம் அவைகளுக்கு கொடி பிடிக்கிறோம், பாடுபடுகிறோம், உயிர்கொடுக்கிறோம். தனிமனிதர்களாக, குடும்பங்களாக, சாதி இந்துகளுக்கு பண்ணையடித்தது போல் அரசியல் இயக்கங்களாக, கட்சிகளாக திரண்டு பண்ணையடிக்கிறோம். தலித் விடுதலையை பேசிக்கொண்டு அரசியல் செய்யும் நாம் சாதி இந்துக்களின் பிடியில்லவா சிக்குன்ரு கிடக்கிறோம். இது தொடரும் வரை இளவரசன்கள் பலிகளாத்தான் ஆக்கப்படுவார்கள். அண்ணல் அம்பேத்கரின் வழியில் தான் நமக்கான விடுதலை இருக்கிறது. அண்ணலின் வழியில் தான் நமக்கான பாதுக்காப்பை அடையமுடியும். அண்ணலின் பாதையில் தான் இளவரசன்கள் மீடகப்படுவார்கள். எம்மை பொறுத்தமட்டில், சாதியவெறியர்களின் ஒடுக்குமுறையை எதிர் கொள்வதற்கு நமக்கு இரண்டு முக்கிய வழி இருக்கிறது. ஒன்று தனித்தனிச் சேரிகளை உடைத்து பெரிய சேரிகளை அமைத்து தலித் பிரதேசங்களை உருவாக்கிட வேண்டும். தலித்துக்களை தலித் மட்டுமே ஆளவேண்டும் என்ற அடிப்படையில் தன்னாட்சி உரிமை பெறுவது மற்றொன்று. அதுவே அண்ணல் நமக்கு காட்டும் வழியும் கூட. அதுவே நமது பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

        அரசு செய்யவேண்டியவை:

  1.        இளவரசனின் குடும்பத்திற்கு ரூ.100,00,000(ஒருகோடி ரூபாய்) பணமும், 10ஏக்கர் விளைநிலமும், அரசுப்பணியும் வழங்கிட வேண்டும்.

  2.      இளவரசனின் மனைவி திவ்யாவிற்கு, பாதுக்காப்பும் மருத்துவ உதவிகளும் வழங்கிட வேண்டும். திவ்யாவிற்கு அரசுப்பணி கொடுத்திட வேண்டும்.

  3.   இளவரசனின் மரணம் குறித்த விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை (CBI)க்கு மாற்றிட வேண்டும்.

  4.      விசாரணை நேர்மையாக நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தலித் வழக்கறிஞர்களைக்கொண்ட கமிட்டியை அமைத்திட வேண்டும்.

 5.        இளவரசன்திவ்யா திருமணத்தை சமூக பிரச்சனையாக மாற்றி கலவரத்தை ஏற்படுத்தி தலித்துகளுக்கும் அரசுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தி இளவரசனின் மரணத்திற்கும் காரணமாய் திகழும் பா.மா.க தலைவர்கள் கைது செய்து வன்கொடுமைத்தடுப்புசட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

 6.   இளவரசனுக்கும், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கும் எதிராக, அச்சுறுத்தலாக தொடர்ந்து பொதுக்கூட்டங்களிலும், ஊடங்களிலும் பேசிய, எழுதிய சமூக மற்றும் தலித் விரோத நபர்களின் மீது வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் தேசிய பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 7.   தலித் (பழங்குடி வன்கொடுமைச் சம்பவங்களை விசாரணை நடத்துவதற்கு காவல்துறையில் தனிப்பிரிவையும், மாவட்ட வாரியாக தனி நீதிமன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும். இவற்றில், தலித் பழங்குடி சமூகத்தைச்சார்ந்த நீதிபதிகள், காவலர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்.

 8.   வன்கொடுமை சம்பவங்களை கண்காணிக்கவும் வெளிக்கொணரவும் கிராமம், வட்டம், மாவட்டம், மாநில அளவிலான கமிட்டிகளை அமைத்திட வேண்டும். தலித்/பழங்குடி இனத்தவர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும்.

 9.   கலப்புத்திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையையும், குடியிருப்பையும் வழங்கிட வேண்டும்.

10.  கலப்புத்திருமண தம்பதியினர்களுக்கு அவர்கள் விரும்பும் காலம் வரை அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

11.  அனைத்து சாதி இயக்கங்களையும் உடனடியாகத் தடை செய்யவேண்டும்.

12.  சாதியின் வன்மம் குறித்தும், தீண்டாமையின் அவலம் குறித்தும் பள்ளியின் பாடத்திட்டத்தில் பாடம் இணைக்க வேண்டும்.

                                               .திருவள்ளுவன்


                                                 மக்கள் குடியரசு கட்சி.