வெள்ளி, 20 நவம்பர், 2015

தமிழ் தேசியத்தில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை.

தி.ஸ்டாலின்.


"உருது பேசும் முஸ்லீம்கள் தமிழர் அல்லர்" என்று கூறியிருக்கிறாராம் நாம் தமிழர் சீமான். இதுக்குறித்து பல கண்டணங்கள் வருகின்றன. ஆனால் இக்கண்டணங்கள் சீமானோடு மட்டுமே நின்று விடுகின்றன. சீமானின் பேச்சு கண்டனத்துக்குரியது. அதில் மாற்றுக் கருத்தில்லை. உமறுப்புலவரிலிருந்து அப்துல் ரஹ்மான் வரை ஏராளமானவர்கள் தமிழ் மொழியில் ஆக்கங்களை கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை இதுநாள் வரை காத்தவர்களில் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் எல்லோரும் பாரசீகத்திலிருந்து வந்திருப்பதாக சீமான்  கற்பனை செய்திருக்கலாம். (அப்படியே வந்தாலும் இவருக்கென்ன?) ஆனால் உண்மையென்ன. இந்துச் சாதியத்தால் தாக்குதலுக்காட்பட்டிருந்த மக்களில் ஒரு பகுதியினரும் இஸ்லாமியர்கள் ஆகியிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மையெல்லாம் சீமானுக்கு தெரிய வாய்ப்பில்லை. மீனாட்சி புரம் கூட அவருக்கு தெரிந்திருக்காது. அதையெல்லாம் தெரிந்துகொள்ள எந்த நிமிடத்திலும் தமிழனுக்கென்று தனி நாடு உருவாக்க தயாராக இருக்கும் சீமானுக்கு நேரமிருக்காது. சரி, சீமானுக்கு இந்த பார்வை-தமிழர் என்பவர்களிடமிருந்து இஸ்லாமியர்களை அன்னியப்படுத்தி மோதலை உருவாக்கும் பார்வை- எங்கிருந்து வந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

சீமான் வார்த்தைக்கு வார்த்தை 'ஒறவு...ஒறவு' என்கிறாரே. அந்த ஈழத்து உறவுகள்தான் இதிலும் சீமானுக்கு வழிகாட்டிகள். சீமானைப் போலவே சீமானுக்கு முன்னவே இஸ்லாமியர் தமிழரல்லர் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர். அந்த முடிவை எடுத்த புலிகள் சீமானைப் போல் உரக்கப் பேசிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. செயலிலும் இறங்கினார்கள். இலங்கை இஸ்லாமியர்களின் ரத்தம் தமிழனின் தூய ரத்த ஆராய்ச்சியால் தெருவில் ஓடிய காலமாக அன்றை நாட்களை ஆக்கினார்கள் புலிகள். ஈழம் என்று இவர்களால் சொல்லப்படும் பகுதியின் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78 ஆயிரம் இஸ்லாமியர்களை வெளியே துரத்தியடித்தனர் புலிகள். 1990 அக்டோபர் 30 ஆம் தேதி புலிகள் "இன்னும் 48 மணி நேரத்துக்குள் இஸ்லாமியர்கள் மொத்தமாக வெளியேற வேண்டும். ஒரு கைப்பையில் உடமைகளையும் 500 ரூபாய்க்கு மிகாத பணத்தையும் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்" என்று ஆணையிட்டனர். தங்களது வீடு,சொத்து,பணம்,நகை என அனைத்தையும் தங்களின் பிறப்பிடத்தில் பறிக்கொடுத்துவிட்டு வந்தார்கள் அந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள். அவர்கள் தமிழையும் மொழியாகக் கொண்டவர்கள்தான். ஆனாலும் சீமான் சொல்லுவதைப்போல் அவர்கள் உருதுவையும் தெரிந்து வைத்திருந்ததால் தமிழனின் தூய்மைக் கெட்டுவிடாமல் இருக்க துரத்தப்பட்டனர்.

கிழக்குப் பகுதியில் புலிகள் இன்னும் கூடுதலாக வன்முறையை இஸ்லாமியர் மீது கட்டவிழ்த்தனர். அதே1990 இல் காத்தான் குடியில் உள்ள ஹூசைனியா மற்றும் மீரா ஜூம்மாப் என்னும் இரண்டு மசூதிகளில் புகுந்த புலி பயங்கரவாதிகள் 140 இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றனர். 78 இஸ்லாமியர் படு காயம் அடைந்தனர்.
அதற்கடுத்த வாரத்தில் எறாவூர், பிச்சிநகர் ஆகிய இஸ்லாமியர் கிராமங்களுக்குள் துப்பாக்கிகளுடனும் கத்திகளுடனும் புகுந்த புலிக்கும்பல் அங்கே 118 இஸ்லாமியர்களை சுட்டும் வெட்டியும் கொன்று வீசியது. இப்படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் 31 பேர் சிறுவர்கள், 36 பேர் பெண்கள். ஆனால் வெறிக்கும்பலுக்கு பெண்ணாவது குழந்தையாவது.

1990 ஜூலை 30 இல் அக்கரைபற்றில் 14 இஸ்லாமியர்களும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அம்பாறை, முள்ளியன் காடு கிராமங்களில் வயல் வேலையில் இருந்த 17 இஸ்லாமையர்களையும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி மீண்டும் அம்பாறையில் 33 இஸ்லாமியர்களையும், ஆகஸ்ட் 12 இல் மட்டக்களப்பு சதாம் ஹுசைன் கிராமத்தில் 60 இஸ்லாமியக் குழந்தைகள் உட்பட 116 இஸ்லாமியர்களையும், மீண்டும் ஆகஸ்ட் 15 இல் அம்பாறை, அரந்தலாவைக்கு அருகில் 9 இஸ்லாமியர்களையும் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

1990 ஆண்டில் மட்டும் இவ்வாறு புலிகள் சுமார் 500 க்கும் அதிகமான இஸ்லாமிய மக்களை கொன்று குவித்தனர். அம்மகள் இவர்களுக்கு எதிராக படையணிகளை வைத்திருக்கவில்லை. ஒரு துப்பாக்கிக்கூட அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் புலிகள் அவர்களை எதிரிகளாக அறிவித்து அழித்தொழித்தனர். ஒரே காரணம் அவர்கள் தமிழர் அல்லர். தமிழர் என்பவர்கள் இந்துக்கள்தான் என்பதே புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசியர்களின் வரையறை. கிறித்துவர்கள் இவர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் கிறித்துவன் இங்கே சாதிக்கிறித்துவனாகவும் இருப்பதால் அவனும் இந்துதா, அதாவது தமிழன் தான். எனவே, இந்துவாக இருக்காத இஸ்லாமியன் தமிழனாகவும் இருக்கமுடியாது என்பதுதான் அன்று புலிகள் எடுத்த முடிவு. அதையேத்தான் சீமானும் கையிலெடுத்திருக்கிறார். சீமானின் அத்தனை தவறுகளையும் விதைத்தவர்கள் புலிகள்தான். சீமானைக் கண்டிப்பதும் புலிகளை ஆதரிப்பதும் நிச்சயம் புரிதலற்ற அரசியல் அல்லது ஆதிக்கத்தின் அரசியலை பாதுகாக்கும் செயல்பாடுதான்.


புலிகள் அளவுக்கு இங்கே சீமான் போகமுடியாதுதான். ஆனால் புலிபாணியிலான அரசியலை செய்துகாட்டுவதன் மூலம் அவர் இங்கிருக்கும் சாதி இந்துக்களை ஒருங்கிணைக்க முயல்கிறார். தமிழ்தேசிய அரசியல் சாதி இந்துக்களை ஒருங்கிணைக்கும் அரசியல் என்பதை நாம் தொடர்ந்து கூறிவருகிறோம். நம்முடைய கூற்றை சீமானும் உறுதிப்படுத்துகிறார்.














கருத்துகள் இல்லை: