வியாழன், 9 ஜூலை, 2015

நமக்கான மண்ணில் நமக்கான அதிகாரம் வேண்டும்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் தலைவர் உயர்திரு பி.எல்.புனியா விடுத்துள்ள அறிக்கையில்(9-7-2015).  "கடந்த நான்காண்டுகளில் தமிழ்நாட்டில் 213 தலித்துகள் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.2011 இலிருந்து இதுவரை 118 தலித் பெண்கள்மீது வல்லுறவுத்தாக்குதல் சாதிவெறியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் வெறும் 2 சதவீதத்தை மட்டும் தலித்துகளுக்கு செலவிடும் தமிழக அரசு மீதித்தொகையை வேறு பணிகளுக்கு செலவிடுகிறது" என்று தகவல்கள் வந்துள்ளன.

"தமிழகத்தில் சாதியக்கொலைகளே நடத்தப்படுவதில்லை" என்று சிலமாதங்களுக்குமுன் தமிழக சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் .பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அதிமுகவின் இந்த நான்காண்டு மாநில ஆட்சியில் 213 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தேசிய ஆணையம் கூறுகிறது. தமிழக அரசு இவ்வாணையத்தின் தகவலை மறுக்கப்போகிறதா?

"எங்கள் பெண்களுக்கு தலித் இளைஞர்களால் ஆபத்து" என்று மாநாடுப்போட்டும் தொலைக்காட்சிகளிலும் கூச்சல் போட்டுவந்தனர் சாதியவெறியர்கள். ஆனால் நான்காண்டில் 118 தலித் பெண்களை சாதிவெறியர்கள் வேட்டையாடியிருப்பதை தேசிய ஆணையம் வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் அந்த 'மாதர்குலக் காவலர்கள்'?

"நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதைச்செய்தோம் இதைச்செய்தோம் என்று பட்டியல் போட்டு முழங்குகின்றன தமிழகத்தை ஆண்டக்கட்சியும்  ஆளும்கட்சியும். ஆனால் உண்மை என்ன? இதோ தலித்துகளுக்களுக்கான தேசிய ஆணையம் "தலித்துகளுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 2 சதவீதம் மட்டுமே தலித்துகளுக்கு செலவிடப்படுகிறது" என்று உண்மையைப்போட்டு உடைக்கிறது. மீதித்தொகை என்ன ஆகிறது? எங்களுடைய பணத்தை எங்களைக்கேட்காமல் எங்களுக்குமில்லாமல் செலவிட ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தேசிய பட்டியலின ஆணையத்தவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் இத்தகையப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதனால் நடப்பதென்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை. தலித் பிரச்சனைகள் குறித்து வருடத்துக்கு இரண்டுமுறை மாநில அரசு முதல்வர் தலைமையில் கூடிப்பேசவேண்டும் என்று தொடர்ந்து ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளும் இரண்டு கட்சித் தலைமகளும் அதையொரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதுகிடையாது. இவ்வாணையத்தை தமிழக அரசு மதிப்பதே இல்லை. அதற்கு காரணம் அது தலித்துகளுக்கான ஆணையம் என்பதுதான். கடந்த திமுக ஆட்சியின் போதும் திமுக அரசு தலித் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லையென்று இதே ஆணையம் சுட்டிக்காட்டியபோது "ஆணையத்தை நான் பிரதமரிடம் புகார் செய்வேன்" என்று கோபப்பட்டார் சமத்துவப்பெரியார். மத்திய அரசு கூடுதலான அதிகாரத்தை தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அளிக்கவேண்டும். ஆணையம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கையெடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

நம்மிடையே நிறைய விழிப்புணர்வு வந்துள்ளது. இயக்கங்களும் வந்துள்ளன. ஆனலும் இன்னமும் வஞ்சிக்கப்படுகிறோம். இந்த நிலை மாறவேண்டுமாயின் அரசியல் நடைமுறைகளையும் மாற்றவேண்டும். நமக்கான மண்ணில் நமக்கான அதிகாரம் என்பதே நம் பிரச்சனைகளைக் களையச்செய்யும்.

---ஸ்டாலின் தி


கருத்துகள் இல்லை: